திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்றத் தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அறம் சாரா நல்குரவு - அறத்தோடு இயைபில்லாத நல்குரவு உடையான்; ஈன்ற தாயானும் பிறன் போல நோக்கப்படும் - தன்னை ஈன்ற தாயானும் பிறனைக் கருதுமாறு போலக் கருதி நோக்கப்படும். (அறத்தோடு கூடாமை - காரண காரியங்களுள் ஒன்றானும் இயையாமை. நல்குரவு - ஆகுபெயர். சிறப்பு உம்மை, அவளது இயற்கையன்புடைமை விளக்கி நின்றது. கொள்வதின்றாதலேயன்றிக் கொடுப்பது உண்டாதலும் உடைமையின், அதுநோக்கிச் சுற்றத்தார் யாவரும் துறப்பர் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
அறத்தோடு இயைபில்லாத நல்குரவுடையான், தன்னை ஈன்ற தாயானும் பிறனைக் கருதுமாறு போலக் கருதி நோக்கப்படும்.
தேவநேயப் பாவாணர் உரை:
அறம் சாரா நல்குரவு-அறத்தோடு பொருந்தாத வறுமையை யுடையவன்; ஈன்ற தாயானும் பிறன்போல நோக்கப் படும்-தன்னைப் பெற்று வளர்த்த தாயாலும் அயலான்போல புறக்கணிக்கப்படுவான். அறஞ்சாராமை யாவது, முற்பிறப்பில் அறஞ்செய்யாமையால் கரணியத் தொடர்பும் , இப்பிறப்பில் அறஞ்செய்ய முடியாமையால் கருமியத் தொடர்பும் இன்மை. ’நல்குரவு’ ஆகு பொருளது. உயர்வு சிறப்பும்மை பெற்றதாயின் இயற்கையான அன்புச் சிறப்பைக் காட்டி நின்றது. கொள்வதொன்று மின்மையோடு கொடுக்கவும் நேர்தல் பற்றி, வறியவனை உறவினரெல்லாரும் துறப்பர் என்பதாம்.
கலைஞர் உரை:
வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை, அவன் தாய்கூட அயலானைப் போல்தான் கருதுவாள்.
சாலமன் பாப்பையா உரை:
நியாயமான காரணங்கள் இல்லாத இல்லாமை ஒருவனுக்கு இருந்தால், பெற்ற தாய் கூட அவனை அந்நியனாகவே பார்ப்பாள்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(புண்ணியப் பலன் சிறிதளவுகூட இல்லாதவனுக்கு நீங்காத வறுமை இருக்கும். அதோடு) புண்ணியப் பலன்கள் இல்லாததால் உண்டாகிற நீடித்த தரித்திரத்தை அடைந்துவிட்டவன் பெற்றெடுத்த தாயாலும்கூட அன்னியன் போல அசட்டை செய்யப்படுவான்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
அறத்தொடு பொருந்தாத வறுமையினையுடையவன் தன்னைப் பெற்றெடுத்த தாயாராலும் யாரோ ஒருவனைப் போல நோக்கப்படுவான்.
Translation
From indigence devoid of virtue's grace,
The mother e'en that bare, estranged, will turn her face.
Explanation
He that is reduced to absolute poverty will be regarded as a stranger even by his own mother.