அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அழுக்கற்று அகன்றாரும் இல்லை - அழுக்காற்றைச் செய்து பெரியராயினாரும் இல்லை; அஃது இல்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல் - அச் செயல் இலாதார் பெருக்கத்தின் நீங்கினாரும் இல்லை. (இவை இரண்டு பாட்டானும் கேடும் ஆக்கமும் வருவதற்கு ஏது ஒருங்கு கூறப்பட்டது)
மணக்குடவர் உரை:
அழுக்காறென்று சொல்லப்படுகின்ற வொருபாவி செல்வத்தையுங் கெடுத்துத் தீக்கதியுள்ளுங் கொண்டு செலுத்தி விடும்.
ஒரு பாவி- நிகரில்லாத பாவி, இது செல்வங் கெடுத்தலே யன்றி நரகமும் புகுவிக்கு மென்றது.
பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை;
பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழந்தோரும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
பொறாமை கொண்டு உயர்ந்தவரும் இல்லை. அது இல்லாதபோது தாழ்ந்தவரும் இல்லை.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(எப்படி யெல்லாம் சிந்தித்துப் பார்த்தாலும்) பொறாமை யினால் செல்வம் பெருகினவர்களும் இல்லை; பொறாமை இல்லாமல் செல்வப் பெருக்கம் இல்லாது போனவர்களும் இல்லை என்பதுமட்டும் நிச்சயமாகத் தெரிகிறது. அதனால் பொறாமை யுள்ளவனிடத்தில் செல்வமிருப்பதற்கும் பொறாமை இல்லாதவ னிடத்தில் வறுமை இருப்பதற்கும் வேறு காரணங்கள் இருக்க வேண்டும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
பொறாமையினைக் கொண்டு பெரியார்களாயினாரும் இல்லை. அத் தீச் செயல் இல்லாதார் பெருக்கத்திலிருந்து நீக்கப்பட்டவராகவும் இல்லை.
Translation
No envious men to large and full felicity attain;
No men from envy free have failed a sure increase to gain.
Explanation
Never have the envious become great; never have those who are free from envy been without greatness.
Transliteration
Azhukkatru Akandraarum Illai Aqdhuillaar
Perukkaththil Theerndhaarum Il
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்