இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நணித்து.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
இகல் கொள்வதால் வெல்லுதல் இனியது என்று கருதுகின்றவனுடைய வாழ்க்கை தவறிபோதலும் அழிதலும் விரைவவில் உள்ளனவாம்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
இகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை - பிறரொடு மாறுபடுதற்கண் மிகுதல் எனக்கு இனிது என்று அதனைச் செய்வானது உயிர் வாழ்க்கை; தவலும் கெடலும் நணித்து - பிழைத்தலும் முற்றக் கெடுதலும் சிறிது பொழுதுள் உளவாம். (மிகுதல் - மேன்மேல் ஊக்குதல். 'இனிது' என்பது தான் வேறல் குறித்தல். பிழைத்தல் - வறுமையான் இன்னாதாதல். முற்றக் கெடுதல் - இறத்தல். இவற்றால் 'நணித்து' என்பதனைத் தனித்தனி கூட்டி, உம்மைகளை எதிரதும் இறந்ததும் தழீஇய எச்சவும்மைகளாக உரைக்க. பொருட்கேடும் உயிர்க்கேடும் அப்பொழுதே உளவாம் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
பிறருடன் மாறுபாட்டின்கண் மிகுதல் இனிதென்று கருதுமவனும், அவன் வாழ்க்கையும் சாதலும் கெடுதலும் நணித்து. நிரனிறை. இது சாயானாயின் உயிர்க்கேடும் பொருட்கேடு முண்டாமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
இகலில் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை- பிறரொடு மாறுபடுவதில் மிகுதல் தனக்கு நல்லதென்று அதனை மேற்கொள்வானது உயிர்வாழ்க்கை; தவலும் கெடலும் நணித்து- நிலைதாழ்தலும் அதன்பின் முடிதலும் மிகநெருங்கியனவாம். மிகுதல் மேன்மேல் முனைதல். இனிதாதல் வெற்றிதருதல். 'தவல்' பொருட்கேடும் 'கெடல்' உயிர்க்கேடுமாம். 'நணித்து' என்பதனைத் 'தவலும் நணித்து', 'கெடலும் நணித்து' எனத் தனித்தனி இரண்டற்கும் பயனிலை யாக்குக. தவ்வல் தாழ்தல்.
கலைஞர் உரை:
மாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி பெறுவது எளிது என எண்ணிச் செயல்படுபவரின் வாழ்க்கை விரைவில் தடம்புரண்டு கெட்டொழியும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறருடன் மனவேறுபாடு கொண்டு வளர்வது நல்லதே என்பவன் வாழ்க்கை, அழியாமல் இருப்பதும் சிறிது காலமே; அழிந்து போவதும் சிறிது காலத்திற்குள்ளேயாம்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(மனத்தாபத்துக்கு இடங் கொடுப்பதே கோபத்துக்குக் காரணம். அதனால்) மனத்தாபத்தை அடக்காமல் அதை மீறவிடுவதனால் உண்டாகிற கோபத்தைப் பாராட்டுகிறவனுடைய வாழ்க்கை விரைவில் துன்பமும் நாசமும் அடைந்துவிடும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
பிறருடன் மாறுபாடு கொள்வதில் தனக்கு இனிமையென்று கருதி அதனைச் செய்வானது உயிர் வாழ்க்கை துன்பப்படுதலும் கெடுதலும் சிறிதுபொழுதில் நடப்பனவாகும்.
Translation
The life of those who cherished enmity hold dear,
To grievous fault and utter death is near.
Explanation
Failure and ruin are not far from him who says it is sweet to excel in hatred.