திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
நெஞ்சே! ( காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயோ?.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(தன் ஆற்றாமை தீரும் திறன் நாடியது.) நெஞ்சே - நெஞ்சே; எவ்வநோய் தீர்க்கும் மருந்து ஒன்று - இவ்வெவ்வநோயினைத் தீர்க்கும் மருந்தாவதொன்றனை; எனைத்து ஒன்றும் நினைத்துச் சொல்லாய் - யான் அறியுமாற்றலிலன், எத்தன்மையது யாதொன்றாயினும் நீ அறிந்து எனக்குச் சொல். (எவ்வம் - ஒன்றானும் தீராமை. உயிரினும் சிறந்த நாணினை விட்டுச் செய்வது யாதொன்றாயினும் என்பாள், 'எனைத்தொன்றும்' என்றாள்.)
மணக்குடவர் உரை:
நெஞ்சே! நீ எனக்கு உற்ற எவ்வநோயைத் தீர்க்கும் மருந்தாவது யாதொன்றாயினும் ஒன்றை விசாரித்துச் சொல்லாய். இஃது ஆற்றுதலரி தென்று கூறியது. இவையெல்லாம் தனித்தனி சிலகூற்றென்று கொள்ளப்படும்.
தேவநேயப் பாவாணர் உரை:
[ தன் ஆற்றாமை தீருந் திறம் நாடியது . ] நெஞ்சே - என் உள்ளமே ; எவ்வ நோய் தீர்க்கும் மருந்து ஒன்று- இத்துன்ப நோயைத் தீர்க்கும் மருந்தாவ தொன்றை ; எனைத்து ஒன்றும் நினைத்துச் சொல்லாயோ - எத்தன்மைய தாயினும் ஒரு முறையை எண்ணி எனக்குச் சொல்ல மாட்டாயா ? பொதுவான மருந்தினால் தீரும் உடல்நோயன்றென்பாள் ' எவ்வநோய் ' என்றும் , கற்புத்தவிர எதையும் இழக்கும் மருத்துவ முறையாயினும் என்பாள் ' எனைத்தொன்றும் ' என்றும் ' கூறினாள் .
கலைஞர் உரை:
எந்த மருந்தினாலும் தீராத என் காதல் நோய் தீர்ந்திட ஏதாவது ஒரு மருந்தை நினைத்துப் பார்த்து, நெஞ்சே! உன்னால் சொல்ல முடியுமா?.
சாலமன் பாப்பையா உரை:
நெஞ்சே! எதனாலும் தீராத என் நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை எண்ணிப் பார்த்துச் சொல்லமாட்டாயா?.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(காதலி தன் நெஞ்சோடு பேசுகிறாள்;) மனமே! தீராத இந்தக் காம வேதனையைத் தீர்க்கக்கூடிய மருந்து ஏதாவது ஒன்றை ஆலோசித்துப் பார்த்துச் சொல்லமாட்டாயா?