நோனா உடம்பும் உயிரும் மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
(காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
('நாணுடைய நுமக்கு அது முடியாது', என மடல் விலக்கல் உற்றாட்குச் சொல்லியது) நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும் - அவ் வருத்தத்தினைப் பொறாத உடம்பும் உயிரும் அதற்கு ஏமமாய மடல் மாவினை ஊரக் கருதாநின்றன; நாணினை நீக்கி நிறுத்து - அதனை விலக்குவதாய நாணினை அகற்றி. ('வருந்தினார்க்கு' என மேல் வந்தமையின், செயப்படு பொருள் ஈண்டுக் கூறார் ஆயினார். மடல் - ஆகுபெயர். 'நீக்கி நிறுத்து' என்பது ஒரு சொல் நீர்மைத்து. அதுவும் இது பொழுது நீங்கிற்று என்பான், 'உடம்பும் உயிரும்' என்றான், அவைதாம் தம்முள் நீங்காமற்பொருட்டு. 'மடலேறும்' என்றது, அவள் தன் ஆற்றாமையறிந்து கடிதிற்குறை நேர்தல் நோக்கி.
மணக்குடவர் உரை:
பொறுத்த லில்லாத உடம்பும் உயிரும் மடலேறும்: நாணினை நீக்கி நின்று. இஃது உடம்போடு உயிரும் மடலேறுமெனத் தலைமகன் கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
( நாணுடைய நுமக்கு அது முடியாதென மடல்விலக்கிய தோழிக்குத் தலைமகன் சொல்லியது . ) நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும் - அத்துன்பத்தைப் பொறாத வுடம்பும் உயிரும் தமக்குக் காப்பான மடற்குதிரையை ஏறக் கருதுகின்றன ; நாணினை நீக்கி நிறுத்து - அதற்குத் தடையான நாணத்தை நீக்கி வைத்து . அறிவு நிறை யோர்ப்புக் கடைப்பிடி யென்னும் ஆண்மைக்குணம் நான்கும் முன்னரே நீங்கிவிட்டன் . எஞ்சியிருக்கும் நாணம் என்னும் இருபாற் பொதுக் குணமும் , ' மடலேற்றத்தின் பொருட்டு நீக்கப்பட்டுவிடும் . அல்லாக்கால் உயிரும் உடம்பும் துன்பம் பொறுத்துக்கொண்டு உடனிற்கு மாறில்லை யென்பான் , 'நோனாவுடம்பு முயிரும் மடலேறும் ' என்றான் . ' உழந்து வருந்தினார்க்கு ' என மேற்குறிளில் வந்தமையின் , இங்கு ' நோனா ' என்று மட்டுங் கூறினார் . ' மடலேறும் ' என்றது தோழி தன் ஆற்றாமை யறிந்து விரைந்து குறைமுடிப்பாள் என்று கருதி . ' மடல் ' ஆகுபெயர் .
கலைஞர் உரை:
எனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப் புறந்தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன்.
சாலமன் பாப்பையா உரை:
காதலை நிறைவேற்ற முடியாது வருந்தும் இந்த உடலும் உயிரும் வெட்கத்தை விட்டுவிட்டு மடல் ஏற எண்ணுகின்றன.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
காம நோயின் வேதனையைப் பொறுக்க முடியாமல் என் உடலும் உயிரும் வெட்கத்தையும் விட்டுவிட்டு மடலேறத் தூண்டுகின்றன.