திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
ஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக இருந்தும் தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பிறர் நாணத் தக்கது தான் நாணான் ஆயின் - கேட்டாரும் கண்டாரும் நாணத்தக்க பழியை ஒருவன் தான் நாணாது செய்யுமாயின்; அறம் நாணத்தக்கது உடைத்து - அந்நாணாமை அவனை அறம்விட்டு நீங்கத் தக்க குற்றத்தினையுடைத்து. ('தான்' எனச் செய்வானைப் பிரிக்கின்றார் ஆகலின், 'பிறர்' என்றார். நாணோடு இயைபு இல்லாதானை அறம் சாராது என்பதாம்.)
மணக்குடவர் உரை:
உயர்ந்தார் பலரும் நாணத்தகுவ தொன்றினைத் தான் நாணாது செய்வனாயின் அவனை அறம் நாணியடையா தொழியும் தகுதியுடைத்தாம். இது நாணமில்லாதாரை அறம் சாரா தென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
பிறர் நாணத் தக்கது தான் நாணானாயின்- கண்டாருங் கேட்டாருமாகிய பிறர் நாணத்தக்க பழியை ஒருவன்தான் நாணாது செய்வானாயின்; அறம் நாணத் தக்கது உடைத்து- அந்நாணாமை அறம் நாணி அவனைவிட்டு நீங்கத் தக்க குற்றத்தை யுடையதாம். நாணில்லாதவனை அறஞ்சாராது என்பது ஆட்படையணி. நாணின்றி அறமில்லை யென்பது கருத்து.
கலைஞர் உரை:
வெட்கப்படவேண்டிய அளவுக்குப் பழிக்கு ஆளானவர்கள் அதற்காக வெட்கப்படாமல் இருந்தால் அவர்களை விட்டு அறநெறி வெட்கப்பட்டு அகன்று விட்டதாகக் கருத வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
மற்றவர் வெட்கப்படும் ஒன்றிற்கு ஒருவன் வெட்கப்படாமல் அதைச் செய்வான் என்றால், அறம் வெட்கப்படும் குற்றம் அவனிடம் இருக்கிறது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(ஆகையினால்) இன்னொருவர் செய்தால் அதுபழியான காரியம் என்று தான் சொல்லுகிற ஒரு காரியத்தைத் தான் கூசாமல் பிறருக்குச் செய்வானாயின், அவன் வாழ்க்கை அறக் கடவுளால் அருவருக்கத் தக்கது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
பிறர் நாணமடையக் கூடிய பழியை ஒருவன் நாணமின்றிச் செய்வானாயின் அச்செயல் அவனைவிட்டு.. அறம் நீங்கிவிடுகின்ற குற்றத்தினை உடையதாகும்.
Translation
Though know'st no shame, while all around asha med must be:
Virtue will shrink away ashamed of thee!.
Explanation
Virtue is likely to forsake him who shamelessly does what others are ashamed of.