சூது-சூதாட்டு; பொருள் கெடுத்து- தன்னைப் பயில்கின்றவன் தோல்வியால் அவன் செல்வத்தைக் கெடுத்து, பொய் மேற்கொளீஇ- வெற்றி பெரும் பொருட்டுப் பொய்யை மேற்கொள்ளப் பண்ணி; அருள் கெடுத்து- தோல்வி வருத்தத்தாலும் வென்றவன்மீது கொள்ளும் பொறாமையாலும் எழும் சினத்தால் அருள் நோக்கைக் கெடுத்து; அல்லல் உழப்பிக்கும்- இங்ஙனம் இருமையிலும் துன்புற்று வருந்தச் செய்யும். மூவகைத் தீங்குகளுள், முன்னதன் விளைவு இம்மையிலும் பின்னவற்றின் விளைவு மறுமையிலும் நிகழ்வனவாம். "பொருள் கொடுத்து என்பது பாடமாயின், அவ்வெச்சத்திற்கு முடிவு மேற்கொளீஇ என்புழி மேற்கோடலாகிய வினைமுதல்வினை" என்னும் பரிமேலழகர் உரை பொருந்துவதே. 'கொளீஇ' இன்னிசையளபெடை.
கலைஞர் உரை:
பொருளைப் பறித்துப் பொய்யனாக ஆக்கி, அருள் நெஞ்சத்தையும் மாற்றித், துன்ப இருளில் ஒருவனை உழலச் செய்வது சூது.
சாலமன் பாப்பையா உரை:
சூதாட்டம் பொருளை அழிக்கும். பொய்யைச் சொல்லச் செய்யும்; மன இரக்கத்தைக் கெடுக்கும்; துன்பத்தையும் தரும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(எப்படியெனில்) சூதாட்டம் முதலில் செல்வத்தை அழித்து, அதனால் பொய்களையும் பேசச் செய்து, அதன் பிறகு சீவ காருணியமில்லாத செயல்களையும் செய்யத் தூண்டிப் பல துன்பங்களில் உழலச் செய்துவிடும்.