தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார்.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பழி நாணுவார் - பழியை அஞ்சுவார், தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் - தம்கண் தினையின் அளவாம் குற்றம் வந்ததாயினும், அதனை அவ்வளவாக அன்றிப் பனையின் அளவாகக் கொள்வர். (குற்றம் சாதிப்பெயர். தமக்கு ஏலாமையின் சிறிது என்று பொறார், பெரிதாகக் கொண்டு வருந்திப் பின்னும் அதுவாராமல் காப்பர் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
தினையளவு குற்றம் வந்ததாயினும் அதனை அவ்வளவிற்றென்று இகழாது பனையளவாகக் கொள்வர். பழிக்கு நாணுவார்.
தேவநேயப் பாவாணர் உரை:
பழிநாணுவார் -பழிக்கு அஞ்சுவார்; தினைத்துணை ஆம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் -தம்மிடம் தினையளவு சிறிதாகக் குற்றம் நேரினும் அதைப் பனையளவு பெரிதாகக் கருதுவர்.
தினை, பனை, என்பன அளவுப்பெயர்கள்; இங்குச் சிறுமை பெருமை பற்றியே வந்தன. உம்மை இழிவு சிறப்பு. 'குற்றம் வகுப் பொருமை. கொள்ளுதல் கொண்டு நீக்குதல்.
பழிபாவங்களுக்கு அஞ்சி, நானும் பெரியோர், தினை என மிகச்சிறிய அளவே குற்றம் வந்தாலும், அதனைப் பனை என மிகப்பெரிய அளவாகக் கொள்வர்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(குற்றம் செய்வதில் பெரிய குற்றம், சிறிய குற்றம் என்பதில்லை.) பழிக்கு அஞ்சுகிறவர்கள் தினையளவு சிறிய குற்றம் நேர்ந்துவிட்டாலும் பனையளவு மிகப் பெரிய குற்றம் வந்துவிட்டதாக வருத்தப்படுவார்கள்.