மூலவர் அழகிய சாந்த மணவாளப்பெருமாள் சங்கு சக்கரம் ஏந்தி கிழக்கு நோக்கியுள்ளார். ஒரு கை அபய ஹஸ்தமாகவும், மற்றொரு கை கதாயுதத்தை பிடித்தநிலையிலும் இருப்பது சிறப்பு. இங்கு இரண்டு கருடாழ்வார்கள் உள்ளனர். ஒருவர் பெருமாளை சுமந்து புறப்பட தயார் நிலையில் நின்ற கோலத்திலும், மற்றொருவர் பெருமாளை வணங்கிய நிலையில் அமர்ந்த கோலத்திலும் இருப்பது மற்றொரு சிறப்பு.
வெளிப்பிரகாரத்தில் நக்கன் மற்றும் சொக்கன் வில்லி என்பவர்களால் வெட்டப்பட்ட கிணறு உள்ளது. இதற்குள் இறங்கினால் உயிர் போகும் என்பதால் ""இறங்காக்கிணறு'' என்று பெயர் உண்டானது. இக்கிணற்றின் அருகில் புளியமரம் ஒன்று இருந்துள்ளது. இம்மரத்திற்கு ""உறங்காப்புளி'' என்று பெயர். இம்மரத்தின் இலைகள் சூரியன் மறைந்த பின்னும் மூடாமல் இருந்ததாக கூறுகின்றனர். இப்போது அந்த மரம் இல்லை.
14ம் நூற்றாண்டில் தென்காசியைத் தலைநகராக கொண்டு ஆட்சி செய்த, வீரபாண்டிய மன்னன், இக்கோயிலுக்கு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தியதாக கல்வெட்டில் செய்தி இடம்பெற்றுள்ளது. அதன்பின் வீரபாண்டியன், பொன்னின் பெருமாள் பராக்கிரம பாண்டியன் ஆகியோரும் திருப்பணி செய்துள்ளனர். உச்சிக்கால நைவேத்யம் மற்றும் திருவிழாக்களுக்காக பராக்கிரம பாண்டியன் தானமாக நிலங்கள் வழங்கியதையும் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. |